Monday 22 August 2011

கண்ணுக்குக் கண்

இன்று ஞாநி அவர்களின் திண்ணையில் சிறிது உறைந்து விட்டு வந்தேன். கண்ணுக்குக் கண்ணில் வழக்கமாக தனது ஆணித்தரமான வாதங்களைப் பதிவு செய்திருந்தார்.

சில கருத்துக்கள் நியாயமாகவே பட்டன. சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் கருணைமனு நிராகரிப்புக்களுக்குப் பின் கொடுங்கோல் இராச்சியமாகச் சித்தரிக்கப்படும் பாரதத்தில் மரண தண்டனை, சட்டமாக இருந்த போதும் அது அந்த அளவுக்கு பெரும்போக்காக நிறைவேற்றப்பட்டது இல்லை என்ற நிதர்சனம் உணர்ச்சிக் கும்பலான தமிழ் மக்களின் காதுகளில் விழுமா என்பது ஐயமே. குறிப்பாக "விடுதலைப் புலிகள் ஈழத்தில் சுமார் பத்தாண்டுகள் சுதந்திரமாக ஆட்சி நடத்தியபோது கவிஞர் செல்வி போன்றவர்களுக்கு மரண தண்டனை விதித்து நிறைவேற்றியதை இவர்கள் கண்டுகொண்டதே இல்லை" என்ற கருத்துக்கு 'இனி தமிழ் இனத் துரோகி' என்ற அடைமொழியால் தமிழ் கூறும் நல்லுலகால் அவர் அழைக்கப்படக் கடவதாக. இதனை ஒற்றி மேலும் பல புள்ளி விபரங்களைக் கொடுத்திருக்கிறார். கட்டுரையைப் படித்துக் கொள்ளவும்.

அடுத்தது மரண தண்டனை தடை செய்யப்பட்ட மேல்நாடுகளிலும், தடை செய்யப்படாத நாடுகளிலும் குற்றங்கள் குறையவில்லை என்ற வாதம். மேலைநாடுகளில் செயல்படுத்தப்பட்டால் கண்ணை மூடிகொண்டு நாமும் அதனைச் செயல்படுத்துவதுதானே நமது பண்பாடு? பண்பாட்டைச் சிதைக்கும் அதிகாரத்தை நமக்கு அளித்தவர்கள் யார்? வெள்ளைக்காரன் என்றாவது பொய் சொல்வானா?

வெள்ளைக்காரன் செய்யும் ஒன்றை ஒருபடி அதிகமாகவே செய்வது தானே நமது பண்பாடு? விளங்கவில்லை என்றால் சில உதாரணங்கள் - குளிர் காரணமாக, மார்கழியில் கூட நமது தட்பவெப்ப்பத்தில் புழுக்கத்தை உண்டாக்கும், வெள்ளைக்காரன் அணியும் உடைகளை, சித்திரையில் கூட பெருமையோடு போட்டுக் கொண்டு நமது மேன்மையை உலகுக்கு உணர்த்துதல்; அவனது வழிவழி வந்த குடி கலாசாரத்தை, பெருமைக்காகவே 'நாங்கள்ளாம் ஒரு புல்லை (full) ராவாக் குடிப்போமில்லை' என்று அவனே வெட்கும் அளவுக்குப் பெருமையோடு நமது வெற்றியை உலகுக்கு உணர்த்துதல்; இன்னும் பட்டியலிட்டால், தனிக் கட்டுரையாகவே போடலாம்.

இந்த நமது பண்பாட்டினை, அதாவது நாம் வெள்ளைக்காரன் செய்வதில் வெள்ளைக்காரனை விட ஒரு படி மேலே என்ற பண்பாட்டினை கீழ்க்காணும் ஞாநி அவர்களின் கருத்தினை ஒற்றி யோசிப்போமா?

"மரண தண்டனை கூடவே கூடாது என்று சொல்வதற்கு ஒரு முக்கியமான காரணம் மனிதர்கள் எல்லாரும் முழுக்க முழுக்க சரியாகச் செயல்படக் கூடியவர்கள் அல்ல என்பதுதான். அரசு அமைப்பு, நீதித்துறை அமைப்பு, காவல் துறை அமைப்பு எல்லாமே மனிதர்களால் நிர்வகிக்கப்படுபவை. மனிதர்கள் ஒருபோதும் தவறே செய்யமுடியாதவர்கள் என்று ஒருபோதும் அறிவியல்ரீதியாக நிரூபிக்க இயலாது.வழக்கை விசாரிப்பவர்களோ, நீதி வழங்குபவர்களோ தவறு செய்திருந்தால், என்ன ஆகும் ? மீதி எந்த தண்டனையையும் விட மரண தண்டனை கொடூரமானது. அதில் ஏற்படும் இழப்பை ஒருபோதும் சரி செய்யவே முடியாது."


முழுக்க முழுக்க சரியாகச் செயல்படாத ஒரு அமைப்பு விசாரித்து, ஒருவனுக்கு மரணதண்டனையத் தவிர்த்து விட்டு ஒரு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்தால் சரியாகி விடுமா? உயிர் இழந்தால் மட்டும்தான் சரி செய்யப்பட முடியாத இழப்பா? ஒருவன் சிறையில் 10 ஆண்டுகள் கழித்து விட்டு, அதன்பின் குற்றமற்றவன் என்று நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு இந்த 'சரியாகச் செயல்படாத அமைப்பு' கடந்துபோன அந்த 10 ஆண்டுகளைத் திருப்பிக் கொடுத்து விட முடியுமா? அதுவும் ஈடு செய்யப்பட முடியாத இழப்புதானே?

"கொலை செய்தவருக்கு சட்டத்தின் பெயரால் மரண தண்டனை விதித்து அவரைக் கொல்வதும் இன்னொரு கொலைதான். ஒருவர் உயிரை எடுக்க இன்னொருவருக்கு உரிமை இல்லை என்பதை நாம் ஏற்றுக் கொண்டால், அது மனிதர்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களால் உருவாக்கப்படும் அரசு போன்ற அமைப்புகளுக்கும் பொருந்தும். கொலை செய்வோருக்கு மரண தண்டனை விதித்தால்தான் அப்படிப்பட்ட குற்றங்களை செய்ய மற்றவர்கள் பயப்படுவார்கள் என்ற வாதம் உலகம் முழுவதும் தவறென்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஒரு கொலைக்கு பதில் கொலை என்பது ‘கண்ணுக்குக் கண்’ சித்தாந்தம். அப்படிப் பழி வாங்கிக் கொண்டே போனால் முழு உலகமும் குருடாகிவிடும் என்பார் காந்தி. எனவே என்னையே ஒருவர் கொலை செய்தாலும் அவருக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என்று சொல்வதுதான் உண்மையான மரண தண்டனை எதிர்ப்பாகும்."


சரி, மனிதருள் ஒருவர் தனக்குக் குற்றம் என்று பட்ட ஒன்றுக்காக அல்லது தனக்கு ஒருவன் அடங்கி நடக்கவில்லை என்ற காரணத்துக்காக, தன்னைவிட எளியவன் ஒருவனை தனது அடியாட்களைக் கொண்டு தூக்கி வந்து அடித்துத் துன்புறுத்தி, அறையினில் அடைத்து வைத்தல் 'ஆள்கடத்தல்' என்று நாம் ஏற்றுக் கொண்டால், அது மனிதர்களால் உருவாக்கப்படும் அரசு போன்ற அமைப்புக்களும் பொருந்தும் தானே? குற்றம் செய்பவருக்கு சிறைத் தண்டனை விதித்தால்தான் அப்படிப்பட்ட குற்றங்களைச் செய்ய மற்றவர்கள் பயப்படுவார்கள் என்ற வாதம் உலகம் முழுவதும் தவறென்று நிரூபிக்கப்பட்டு விட்டது. ஒரு ஆள்கடத்தலுக்கு பதில் இன்னொரு ஆள்கடத்தல் என்பது 'கொலைக்குக் கொலை' சித்தாந்தம். அப்படிப் பழி வாங்கிக் கொண்டே போனால் உலகம் உருப்படாதென்பார் முற்போக்காளர் ஞாநி. அவரை ஒருவர் கொலை செய்தாலும் அவர் குற்றவாளிக்கு மரண தண்டனை கூடாதென்று கூறும் உறுதியாளர். அதே உறுதியுடன் இருக்க முடியாதவர் கண்டிப்பாகக் கொலை செய்யப்பட வேண்டிய ஒரு பிறவிதான். கொலை செய்யப்பட்ட பின் ஞாநி போல் அவர் கொலை செய்தவரை மன்னிப்பாரா என்று இங்கு என்னால் உறுதியாகக் கூறமுடியாது.

ஆகவே, இன்னும் எத்தனை நாள்தான் மேலை நட்டைப் பார், அங்கு இல்லை இங்கு மட்டும் ஏன் என்று கேட்டுக் கொண்டிருக்கப் போகிறோம்? மேலைநாடுகள் இந்தியாவைப் பார் என்று போற்றுமளவுக்கு நாமும் நமது அமைப்புகளை மாற்றிப் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டாமா? என்று நமது காவல்துறையும், நீதிமன்றங்களும், இராணுவமும் கலைக்கப்படுகின்றனவோ, என்று ஒருவன் சுதந்திரமாக ஒரு வீட்டுக்குள் புகுந்து தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு, அதனை எதிர்ப்பவர்களின் வாழ்வை முடித்து விட்டு சுதந்திரப் பறவையாக இந்த நாட்டில் உலவ முடிகிறதோ அன்று தான் நாம் ஒரு பொற்காலத்தில் வாழ்வதாக, மேலை நாட்டினருக்கு இணையாக வாழ்கை கொண்டிருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். அதுவரை நாம் ஒரு காட்டுமிராண்டிகள் கூட்டத்தில்தான் வாழ்ந்து கொண்டிருப்போம்.

பின்குறிப்பு: ஆண்டவா, குற்றவாளிகளிடமிருந்து எங்களை ஓரளவாவது இந்த அரசாங்கம் காப்பாற்றும். ஆனால் இந்த முற்போக்காளர்களிடமிருந்து காத்துக் கொள்ளும் சக்தியை எங்களுக்குத் தருவாயாக.

Saturday 21 May 2011

நாம் தமிழர் - தமிழ்த்தமிழன்

கருப்பச்சாமி என்கிற நான்.... நான் என்பது இந்த எனது உடலா? இல்லை - நான், அதாவது கருப்பச்சாமி என்கிற நாமகரணம் கொண்டு ஒரு பூத உடலுடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், இறந்து, இந்தப் பூதவுடலை எரித்தோ அல்லது புதைத்தோ அழித்தபின்னும் கருப்பச்சாமியாகத்தானே அறியப்படுவேன்? அப்படியானால் கருப்பச்சாமி என்ற எனது இந்த நாமகரணம் எனது உடலுக்குக் கொடுக்கப்படவில்லை; அப்படியானால்... ஆனால் கருப்பச்சாமி என்று நான் மட்டும் அழைக்கப்படுவதில்லையே? கருப்பச்சாமி என்றால், இப்பூவுலகில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் பல பூதவுடல்களையோ அல்லது அவ்வுடல்களை இயக்கிக் கொண்டிருக்கும்/இயக்கிய உயிர்களையோ குறிக்கலாமன்றோ? அப்படியானால் நான்? - ஆரம்பிச்சுட்டான்யா என்று நீங்கள் எகிறும் முன் - இந்தப் பதிவு இந்தத் தத்துவ விசாரம் பற்றியதல்ல. இதற்குக் கூட விவாதித்து விளக்கம் கண்டுவிடலாம். ஆனால் இந்த 'தமிழன்'-னுக்கு definition யோசித்தால் எனக்கு மண்டைக் கிறுக்கு வந்துவிடும் ("இப்ப மட்டும் என்ன வாழுது?"). ஏனென்றால்...

தமிழன்னா யாருய்யா? தமிழ் பேசுறவனா? தமிழ் பேசும் பகுதியில் பிறந்தவனா? தமிழன் தமிழ்தான் பேச வேண்டுமா? தமிழன் தமிழிலும் பேச வேண்டுமா? தமிழ் பேசினால் மட்டும் தமிழனா? ஒரே கொளப்பம்யா..

எப்படி இந்தக் கொளப்பம் வந்துச்சுன்னா... கொளப்பம்னா அது இன்னிக்கு நேத்திக்கில்ல; தமிழனையும் தமிழையும் காப்பாத்துறதுக்கு ஒரு கூட்டம் கெளம்பிச்சே? அப்பலயிருந்தே எனக்கு வந்துருச்சு.

எப்படி இந்தக் கொளப்பம் வந்துச்சுன்னா... கொளப்பம்னா கொஞ்ச நஞ்சமில்லை. அன்னாடம் தமிழன் 'label' உள்ள பலரையும் பைத்தியம் புடிக்க வச்சு என்னையப் பாத்தாலே 'கிட்ட வந்தாலே கடிச்சு வச்சுரும்டா'-ங்கற range-ல அவவன் ஓட ஆரம்பிக்கிற அளவுக்கு நான் பிராண்டீருக்கேன்.

எங்கேருந்து ஆரம்பிக்கலாம்? 'ஆயிரமாயிரமாண்டுகளாய் ஆர்வத்தோடு ஆள்வோருக்கும் ஆண்டவருக்குமுழைத்து, அண்டத்திலேயாறா இரணத்தோடும், ஆரியர்க்கடிமையாயும், ஆசுவாசமற்ற ....' என்று அடுக்கு மொழியென்ற பெயரில் குண்டக்க நம்மள குனிய வச்சு... வேண்டாம்; நல்ல வார்த்தைல சொன்னா சொல்ல வந்ததோட வீரியம் போய்ரும். கெட்ட வார்த்தைல சொன்னா நாகரீகமா இருக்காது (நமக்கு விவஸ்தைன்னு ஒண்ணு இருக்குல்ல?). இவிங்கள்ட இருந்து ஆரம்பிச்சோம்னாக்க இந்த ஜென்மத்துல முடிச்சுக்குற மாட்டொம். தவிர வீச்சம் பொறுக்க முடியாது. இவிங்யளோட aim என்னங்கிறதுல இவிங்யளுக்கும், நமக்கும் எந்த doubt-ம் இல்ல. ஆனா இவிங்யள்ட்ட என்ன ஒரு நல்ல விஷயம்னா வேஷம்லாம் சரியாப் போட்ருவாய்ங்ய.

பாயின்ட்க்கு வர்ரேனே. சிறு வயசுல நானும் - நான் முன்னாடியே ஒருபதிவுலசொல்லீருக்குற மாதிரி, சிறுவயசுல சினமா பாக்குறதுன்னா எனக்கு ரொம்பக் கிறுக்கு - 'என் இனிய தமிழ் மக்களே'ன்னு தகர டப்பாவைத் தரையில வச்சுத் தேச்ச மாதிரியான, இப்பிடிப்பேசினாத்தான் திராவிடப் பாரம்பரியமுன்னு form-க்கு கொண்டுவரப்பட்ட ஒரு கொரல்ல நம்ம இமயம் bbaரதிர்ராzzaa(மன்னிக்கணும், அவரு சொல்றா மாதிரியே அவரு பேரப் போடுறதுக்கு தமிழ்-ல எழுத்து இன்னும் கண்டுபுடிக்கல) அறிமுகப்படித்தி வச்சு அதுக்கப்புறம் ஒரு ரெண்டரை மணி நேரத்துக்கு வசனமா பாட்டான்னு கண்டுபுடிக்க முடியாத ஒரு form-ல படத்துல வர்ர character-கள் ஒருத்தருக்கொருத்தர் communicate பண்ணிக்கிட்டு, side-ல ஒரு கிளவி(யோ அல்லது படத்துல வர்ர ஒரு வில்லியோ (வாழ்க தமிழ்) ) பழமொழியா punch டயலாக்கோ யாரும் இதுவரைக்கும் கேள்விப்பட்டிருக்காத, 'ச்செக்காணூரனில செக்காட்டுனா ச்சோளவந்தான்ல எண்ண கொட்டிச்சாம்' மாதிரி ஏதொ ஒண்ணை சொல்லிக்கிட்டு, எது எப்பிடி இருந்தாலும் கடேசில அவ்வளவு பேரும் அருவாளத்தூக்கீட்டு அம்மங்கோயில் வாசல்லையோ, கருப்பனசாமி கோயில் வாசல்லையோ ஒருத்தர ஒருத்தர் வெட்டிக்கிட்டு சாவர மாதிரி template-ஆ வர்ர படங்களைப் பார்த்துட்டு இமயம் இமயம்தான்னு கெறங்கிப் போய் கெடந்துருக்கேன். ஆனா ஒரு தடவ கூட நானும் ஒரு கெராமத்தான் தானே; நம்மாளும் மதுரக்கிட்டதானே இருக்கோம்; நம்மூருல ஒருத்தனும் இப்பிடியெல்லாம் hysterical-ஆ நடந்துக்குறதில்லையே?-ன்னு யோசிச்சுப்பாத்ததில்லை. சரி, சினிமான்னா கொஞ்சம் அதிகப்படியாத்தான் இருக்கும் தான். ஒருகட்டத்துல தமிழனுக்கு நான்தான் certification authority-ன்னு கெளம்பி முத்தமிழ் வித்தவருக்கு ஒரு பக்கமும் இலங்கைத் தமிழருக்கு ஒரு பக்கமும் ஓவராச் சொம்படிக்க ஆரம்பிச்சப்பதான் எனக்குத் தோனிச்சு, இந்த மனுசன் என்ன பண்ணினான்? என்ன தகுதில எல்லாருக்கும் தமிழ் label குடுக்குறான்?-ன்னு.

இன்னிக்கி நீங்க சாதாரணமாப் பாக்கலாம். ஊருல இருக்கற அம்புட்டு பேரும் advice பண்ணக் கெளம்பிட்டாய்ங்ய (அட என்னையும் சேத்துதான்). படத்துக்குப் படம், நம்ம இளையதளபதி (ங்கிறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா?) கூட நாட்டுல இளைஞர்கள் எப்படி இருக்க வேணுமுன்னு ஒரு குத்துப் பாட்டுல வந்து சொல்லீட்டு, sorry, பாடீட்டுப் போவாரு. சலிச்சுப் போச்சு. ஆனா எனக்கு, அப்போ, இந்த 'பொதுவாக எம்மனசு தங்கம்'ங்குற (இன்னிக்கி வரைக்கும் எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு) பாட்டு வந்த புதுசுல தோணும்; இவன் என்னடா பண்ணீட்டான்? ஒரு மாட்ட அடக்கிப்புட்டு(அதுவும் படத்துல), 'ஒலகத்துல நீ இப்பிடி இரு; நல்லாருப்ப. ஒங்க ஊருக்கு நல்லது பண்ணு'-ன்னு ஒலகத்துக்கே advice பண்ணுறான்னு. வெளீல சொன்னா நம்மள கிறுக்கேம்பாய்ங்ய. அந்த மாதிரி, மொக்க படங்கள எடுத்துப்புட்டு தமிழ் கெராமத்துக் கலாச்சாரத்த recondition பண்ணுனதா நெனச்சுக்கிட்டு, certification authority பொறுப்ப கைல எடுத்துக்கிட்டு இவிங்ய குடுக்குற டார்ச்சர் இருக்கே... முடியல.

அதேபோல இன்னும் 2 விடுதலை வீரர்கள். சீமான் மற்றும் திருமாவளவன். ஒருகாலத்துல Srilanka-ல Indian team விளையாடினப்போ, அதப் பாக்க தமிழ் கூறும் நல்லுலகுலருந்து போனவிங்யளோட பொறப்ப கேளிவிக்குள்ளாக்குன (என்ன பட்டம்னு தெரியல) சீமான், அதுக்குக் கொஞ்ச காலம் முன்னாடித்தான் ஒரு சிங்களப் பொண்ண நாயகியாப் போட்டு ஒரு படம் எடுத்தாரு (தம்பி). ஒருவேளை 'கலைச் சேவை'க்கு இந்த மாதிரி birth rule-லாம் பொருந்தாது போல.

ஒவ்வொரு தரமும் இலங்கைல விடுதலைப்புலிகளின் கை தாழும்போதும் தமிழினத்துக்கு (அது தான் இப்போ என்ன?) ஆதரவா சத்தமா கூவிட்டு, தேர்தலோ, பதவியோ, இலாபமோ (எல்லாம் ஒண்ணுதனப்பா) சத்தமில்லாம தியாகத் திருவிளக்கு கூட கூட்டுவச்சு கும்மியடிக்கிற விடுதலைச் சிறுத்தை (ங்கொய்யால எவனும் மனுஷ்னில்ல போலருக்கு) கூட நம்ம நாட்டுல உண்டு.

சரி அதெல்லாம் வியாபார உத்தி. தந்திரம். நாம கொண்டு போய் அதுல மூக்க நொழைக்கப்டாது. ஆனா நமக்கு என்ன பிரச்சனைன்னாக்கா, தமிழன் தகுதிக்கு rules create பண்னும் இவுக எதத் தமிழ்த் தகுதீன்னு சொல்லுறாகன்னு தெரியல.

கொஞ்சகாலத்துக்கு முன்ன இந்தப் பதிவில் டோண்டு அவர்கள் ஒரு பின்னூட்டத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

தலித்துகளின் தலைவர்கள் எனச்சொல்லிக் கொள்ளும் திருமா போன்றவர்கள் ஜீன்ஸ் ரெய்பேக் ஷூ ஆகியவற்றைத் தனக்கு மாட்டிக் கொள்ளும் ஆர்வத்தில் ஒரு பங்கையும் தங்கள் இன ஏழைகளௌக்கு செய்கிறார்களா என்பதை பாருங்கள். அவர்களுக்குள்ளேயும் சாதி ஏற்றத் தாழ்வுகள் உண்டு.


அதுக்கு அஞ்சா சிங்கம் (:)) அவர்கள் இவ்வாறு பதிலிறுக்கிறார்:

ஏன் சார் ஜீன்சும் ரீபாக் ஷூவும் உங்கள் கண்ணை உறுத்துதா பாருங்கப்பா இவங்க பார்வைய .......................


அதென்னமோ தமிழ ரொம்பத் தாங்கிப் பிடிக்கிறவங்களுக்குக் கீழ்க்கண்ட பழக்கங்கள் உண்டு:
1. தமிழ்-ல பேசுறது கம்மி (ஆனா வேறு மொழில பேசுவாங்களான்னா, அது தான் இல்லை; ஓட்டை இங்கிலிசு தான்)
2. தங்களது பிள்ளைகளைத் தமிழில் படிக்க வைப்பதில்லை (குறிப்பா ஆங்கிலம் தான் படிக்க வைப்பாங்க; அவங்க பிள்ளைங்கள்ளாம் நல்லா ஆங்கிலம், இந்தி எல்லாம் பேசுவாங்க)
3. தமிழர் உடை உடுத்துவதில்லை (கண்டிப்பாக மேற்குறிப்பிட்ட மூவரும் இல்லை)
4. தமிழர் பழக்கங்கள், கலாசாரங்கள் எல்லாவற்றையும் பழிப்பார்கள் (அப்புறம் எதுதான்யா தமிழன் பெருமை?)

வேறு ஏதும் தமிழ்ப் பழக்கங்கள்? ம்ம்ம் எல்லாவற்றையும் நொட்டை சொல்வார்கள். அப்புறம் தனக்கு வராத, தன்னால் இயலாத எதையும் செய்பவர்கள் தமிழர்கள் அல்ல. அதற்கான அத்தாட்சிகளாக மாட்டியவர்கள் ஈழத்தமிழர்கள். 'நான் அவுங்கள support பண்ணுறேன் அதனால நான் தமிழன்; நீ பண்ணலைன்னா தமிழன் இல்ல' இப்படீன்னு எல்லாத்தையும் புடிச்சுத் திட்டுவாங்க. அதுலையும் ஒரு தனி equation உண்டு; ஈழத்தமிழன்=LTTE.

உதாரணத்துக்கு மேற்குறிப்பிட்ட டோண்டு/அஞ்சா சிங்க(:)) உரையாடலையே பார்ப்போம். மேலை உடை (நமது சூழலுக்கு ஒவ்வாவிட்டாலும்) உடுத்துவது மேன்மை என்று பொதுப் புத்தி. எவ்வளவு வெய்யிலடிச்சாலும் காத்துப் புகாத சட்டை போட்டுக்கிட்டு, தப்பித்தவறிக் கூட காத்து புகுந்துராம இருக்க டை கட்டிக்கிட்டு, கால்ல ஷூ சாக்ஸ் போட்டுக்கிட்டு 'தமிழன் தமிழன்'னு பெருமை மட்டும் பேசுவாய்ங்ய. இதுகளையெல்லாம் போட்டுகிறது பெருமை? அத எவனாச்சும் என்னடான்னு கேட்டா, 'அது உன் கண்ணை உறுத்துதா'ன்னு என்னமோ இவுக அடைஞ்ச சாபல்யத்தப் பொறுக்க முடியாமப் பொறுமுற மாதிரிக் கேள்வி கேப்பாக. என்னே தமிழன் பெருமை!!!

சரி, தமிழன் சாதி வெறி புடிச்சு மக்களைச் சாதிவாரியாப் பிரிச்சு வச்சு காட்டுமிராண்டியா வாழ்ந்தான் (சமீபத்திய கொடுமை பாமரனின் இராசராச சோழன் பற்றியது). அப்புறம் என்ன தமிழன் பெருமை வேண்டிக்கிடக்கு?

சரி, இப்போவவது தமிழனா இருப்போம். ஆனால், தமிழ் பேச வேண்டுமா?

இல்லை.

தமிழர் பழக்கங்களைப் பின்பற்ற வேண்டுமா?

ஐயையோ அது எப்படி முடியும். எங்களையெல்லாம் வேட்டி கட்டிக் கொண்டு கட்டுப்பெட்டியாக, காட்டுமிராண்டியாக வாழச் சொல்கிறீர்களா?

அப்புறம் தமிழ் நாட்டிலோ அல்லது ஈழத்திலோ வாழ்ந்து கொண்டிருக்க வேண்டுமா?

அது எப்படி? சௌகார் பேட்டை சேட்டுகளையோ பார்ப்பனர்களையோ தமிழராக ஒத்துக் கொள்ள முடியுமா?

அப்புறம்?

தமிழனாய் இருக்க வேண்டும்.

அதுதான் எப்படி?

நாங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டினாலே போதும்.

ஓஹோ?

ஏதாவது ஒரு அடிப்படையில் சாதி பிரித்துக் கொண்டு இனக்குழுக்களா வாழ்றது தப்புன்னா ஒரு மொழி அடிப்படையில் ஒரு இனமாக பிரிந்து கொள்வதில் ஒரு தப்புமில்லையா?

இனத்துரோகி.

ஐயையோ.

ஒண்ணு மட்டும் சம்பந்தமில்லாம நினைவுக்கு வருது. நம்ம முத்தமிழ் அறிஞரின் வாரிசுகள், சினிமா தயாரிக்கிறாங்க; நடிக்கிறாங்க; அதெல்லாம் ஒரு தப்புமில்லன்னு வாதாடுறாங்க. ஆனா ஆயிரம் படத்துக்குக் கதை வசனம் எழுதின (என்னாது ஆயிரமா? கண்டுக்காதீங்க அப்பிடித்தான் அடிச்சு விடுவோம்) எங்க ஐயாவோட வாரிசுகள் யாரும் ஒரு சினிமாவுக்கு கதையோ வசனமோ, டைரக்ஷனோ இல்லை மூளை தேவைப்படுற ஏதாவது ஒண்ணு பண்ணுனாங்களான்னா; இல்லை. ஏன்னா தயாரிக்கிறதுக்கோ நடிக்கிறதுக்கோ பெருசா மூளைய யூஸ் பண்ணத் தேவையில்ல. ஆனா மித்ததுக்கெல்லாம் வேணும்ல?

அதே மாதிரித்தான் நீங்க தமிழ் மட்டும் பேசுங்க, ஆனா நாங்க ஓட்டை இங்கிலிசிலயோ இல்ல அதுங்கூட இல்லாம தமிழ் மட்டுமோ தான் பேசுவோம். ஆனா branded jeans, tshirt, shoe இத்யாதிகளயெல்லாம் போட்டுக்கிட்டு நீங்கள்ளாம் தமிழனாயிக்க்ணுமுன்னு திட்டுவோம். வெள்ளக்காரன் போடுற ட்ரஸ்ஸையெல்லாம் போட்டுக்குவோம். தமிழுக்கு நீ என்னடா பண்ணுனன்னு கேக்கக் கூடாது. jeans tshirt போட்டுக்கிற மாதிரி அது என்ன அவ்வளவு ஈசியா என்ன? நாங்க ஏண்டா இங்கிலிசு பேசக் கூடாதுன்னு கேக்கக் கூடாது. எங்களால jeans tshirt தான் போட்டுக்க முடியும், அதுக்கு வெறும் ஒடம்பு இருந்தாப் போதும். ஆனா இங்கிலீசு பேசுறது அப்பிடியில்லைல?

Wednesday 6 April 2011

நாம் தமிழர் - தன்னலமற்ற தலைவர்

நீங்கள் இந்தியத் தமிழராய் இருந்தால், அதுவும் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த தமிழராய் இருந்தால், கண்டிப்பாக "ஒரு காமராஜ் போலவோ, ஒரு கக்கன் போலவோ தலைவர்கள் இருந்ததெல்லாம் அந்தகாலம்" என்ற அங்கலாய்ப்பை, அதுவும் குறிப்பாக தேர்தலை ஒட்டி கேள்விப்படாமலிருந்தால், நீங்கள் ஒரு அம்மாஞ்சி கூட இல்லை; அதாவது வெளியுலகின் காற்று கூட உங்களைத் தீண்டவில்லையென்றுதான் பொருள்.

'நல்ல தலைவர்' என்று யாரைக் குறிப்பிடுவீர்கள் என்று கேட்டால், தேசப்பற்றும் நேர்மையும் கொண்டவராகத் தம்மை அடையாளப்படுத்த விரும்புவோர் யாராய் இருந்தாலும் கூறுவது மேற்குறிப்பிட்ட இருவருடன் ஜீவா, சத்தியமூர்த்தி போன்றோரையும் அவர்கள் கூறக்கேட்கலாம். ஈவேரா, அண்ணாத்துரை பெயர்களைக் கூட அந்த வரிசையில் வைக்க மாட்டார்கள். இந்தத் தலைவர்களெல்லாம் இவ்வகையினரானதற்கு அவர்கள் கூறும் முக்கிய காரணங்களில் சில "இந்தத் தலைவர்களெல்லாம் தன்னலமற்று இருந்தார்கள். இவர்கள் குடும்பத்துக்கு உழைக்கவில்லை; மக்களுக்கு உழைத்தார்கள், தங்களது குடும்பத்தை வறுமையில் வைத்தார்கள்" போன்றவை.

அன்மையில் கூட (அதான் தேர்தல் நேரமாச்சே) யாரோ ஒரு பெருந்தலை "காமராஜர் இறக்கும் போது அவரது பையில் XXX ரூபாய்களும்......" அதற்கு மேல் சொத்து என்று குறிப்பிடக் கூட முடியாத, இன்றைய குழந்தைகளுக்கு தினச்செலவுக்குக் கொடுத்தால் சிறார் வன்கொடுமைக்காக நம்மை சட்டத்தின் முன் நிறுத்தி வைக்ககூடிய அளவுக்கு அவர்களுக்கு வெறுப்புண்டாக்கக் கூடிய, ஒரு சொற்பத்தைக் குறிப்பிட்டார்.

எந்த வாரத்திய அரட்டை அரங்கம் (அரட்டை அரங்கம் - அதுவும் இராஜேந்தரின் வசமான பின் - ஒரு மொக்கை என்பதே எனது கருத்து) என்று நினைவில்லை, அன்மையில் ஒரு வானொலியில் கேட்டது; தலைப்பு "அடுத்த பிறப்பில் நீங்கள் என்னவாகப் பிறக்க ஆசை" (அல்லது அதனை ஒட்டி ஏதோ ஒன்று). நமது தமிழருக்கு 'மைக்' கிடைத்து விட்டால் தமது கருத்தாக கலக்கும் கலக்கு ஒரு தனி தலைப்பில் விவாதிக்க வல்லது (இடம் கிடைத்தால் இப்படி ஒரு கட்டுரை வருவது போல). 'மைக்'கில் என்ன கூறினாலும், modulation மட்டும் சரியாக வருமாறு அமைத்துக் கொண்டால் ஏன் எதற்கு என்று சிந்திக்காமலேயே கை தட்டும் நமது தமிழர் வழக்கமும் தனித் தலைப்பில் விவாதிக்க வல்லது. இவை பற்றியல்ல நான் கூற விழைந்தது. அதில் ஒருவர் - இன்றைய அரசியல் தலைவர்களெல்லாம் மொள்ளமாறிகள் (இந்த வார்த்தைப் பிரயோகம் என்னுடையது :)); அந்த காலத்துத் தலைவர்களெல்லாம் தங்களது குடும்பத்தை வறுமையில் விட்டு விட்டு நாட்டுக்கு உழைத்தார்கள், எனவே, தான் அடுத்த பிறப்பில் ஒரு காமராஜாகவோ, கக்கனாகவோ பிறந்து மக்களுக்குத் தொண்டாற்ற ஆசை என்று கூறினார். என்ன கொடுமை சார் இது? இந்தப் பிறப்பிலேயே இவர் இன்னும் குத்துக்கல்லாட்டம் இருக்கிறார். அரட்டை அரங்கத்துக்கெல்லாம் வந்து 'மைக்'கெடுத்து பொளந்து கட்டுகிறார். ஆனால் இவர் அடுத்த பிறப்பில் தான் நல்ல ஒரு தலைவராவாராம். இந்தப் பிறப்பில்? சும்மா இன்னொரு பிச்சைக்காரத் தலைவர் தலைமையேற்று, இவரையும் இவரது குடும்பத்தையும் மிக்க சம்பத்துடன் வாழ வைப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். நமது இந்தக் கட்டுரையின் கருப்பொருளே தமிழரின் இந்தத் தலையாய நற்குணம் பற்றியதுதாம்.

பொருள் தொடர்பற்றதென்றாலும் குணம் தொடர்புடையது என்பதால் இன்னொரு உதாரணம். ஒரு பழைய விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சி. ஒரு புறம் தமிழாசிரியர்கள் (கவனிக்க - தமிழார்வலர்கள் இல்லை); மறுபுறம் தொழில்நுட்பத் துறையில் பணியோ படிப்போ மேற்கொண்டிருப்பவர்கள் (என்னவொரு இணை?); அதாவது தமிழுக்கு எதிரானவர்கள் (அவ்வாறுதான் அன்று அவர்கள் வாதாடினார்கள்). இந்நிகழ்ச்சியில் ஒருவர் கேட்கிறார் "ஆங்கிலம் தவறாகப் பேசும் போதெல்லாம் யாராவது வந்து சரி செய்கிறார்கள்; அது போல நாங்கள் தமிழில் தவறிழைத்தால் நீங்கள் ஏன் சரி செய்யவில்லை" என்று.பொதுவாக தொழில்நுட்பத்துறையில் பணிபுரிவோருடன் ஏற்படும் விவாதத்தில் நான் அடிக்கடி சந்திக்க நேரிடும் கேள்வி, ஆங்கிலத்தில் கலைச் சொற்கள் உள்ளன; தமிழில் இல்லை. மிகப் பிரபலமான ஒரு மடக்கல் என்னவென்றால், ஒரு மிதிவண்டியின் பாகங்களை தமிழில் கூறக் கேட்பது தான். எதற்காக இந்த நீட்டி முழக்கல் என்றால், "யாரும் இதைச் செய்யவில்லையே" என்று யாரும் எதையும் செய்யாமல் அடுத்தவரைச் சுட்டும் நமது அருந்தமிழ்க் குணத்தைக் காட்டத்தான். ஆங்கிலம்->தமிழென்றாலும் சரி அரசியலென்றாலும் சரி அவர்கள் சரியில்லையே என்று மட்டும் தான் தமிழன் கூறுவான். அதாவது வெல்லம் நான் தின்பேன், விரல் மட்டும் அவன் சூப்புவான்.

ஒரு நண்பருடன் உரையாடும் போது குறிப்பிட்டார். ஒரு முறை ஜீவாவைப் பார்க்க அவரது மகள் சென்னைகுச் சென்றாராம். அப்போது ஜீவா தீவிரமாக எதையோ எழுதிக் கொண்டிருந்தாராம். மகளைக் கூட நிமிர்ந்து பார்க்கவில்லையாம். உடனே அவரது மகள் தான் வந்திருப்பதாக ஒரு துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்தாராம். அதற்கு, ஜீவா ஏதோ அசிரத்தையான பதிலை (அசிரத்தை என்பது எனது பிரயோகம்) இன்னொரு துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்தாராம்; நிமிர்ந்தும் பார்க்கவில்லையாம். இதனை எனது நண்பர் ஜீவாவின் மேன்மையைக் குறிக்கக் மிகப் பெருமையாகக் குறிப்பிட்டார். அதே நண்பர் இன்னொரு முறை, ஒரு முறை கக்கன் அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சாதாரண நோயாளிகள் பிரிவில் தரையில் பாயில் படுக்க வைக்கப் பட்டிருந்ததையும் அங்கு தற்செயலாக எம்ஜியார், மற்றொருவரைக் காண அங்கு வந்து, கக்கனைக் கண்டுகொண்டு அவரை வேறு பிரிவுக்கு மாற்ற உத்தரவிட்டதையும் பெருமையாகக் குறிப்பிட்டார். தலைவர்களைப் பற்றி ஏதாவது இது போன்ற சம்பவங்கள் அவ்வபோது குறிப்பிடப்படுவது உண்டென்பதாலும், அதுவும் இது போன்ற தன்னலமற்ற தியாகங்களில் எனக்கு நம்பிக்கை இல்லையென்பதாலும், நமது பேசு பொருள் இவ்வறான தலைவர்கள் குறித்த நமது மக்களின் எதிர்பார்ப்பு பற்றி மட்டுமே என்பதாலும் நான் இவற்றின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்க முயற்சியெடுக்கவில்லை. அதாவது தமிழனுக்குத் தலைமையேற்க வருபவன் எப்படியிருக்க வேண்டுமென்றால், அடுத்த வேளைச் சோற்றுக்கு சிங்கியடிக்க வேண்டும், தனது குடும்பத்தைக் கண்டுகொள்ளக் கூடாது, நல்ல பல திட்டங்கள் தீட்டி, அவனையும் அவனது குடும்பத்தாரையும் சுபிட்சமாக வாழவைக்க வேண்டும். இந்தச் சுயநல கூட்டத்துக்கு ஆப்பு வைக்கத்தான் கிளம்பியது ஒரு கூட்டம். வெற்றியுடன் கடந்த 45 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது.

எனது தனிப்பட்ட கருத்தில், காமராஜ்களையோ கக்கன்களையோ எந்த விதத்திலும் ஊக்குவிக்கக் கூடாது என்று கருதுபவன் நான். எவ்வாறு தமிழனுக்கு நாத்திகத்தை உபதேசித்து விட்டு, தனது குடும்பத்தார் கோவில் கோவிலாகச் செல்லும்போது கண்டுகொள்ளாமலிருக்கும் முத்தமிழறிஞரைக் கூறு போடுகிறோமோ அதே போல தானே தனது குடும்பத்தைக் காப்பாற்றாமல் ஊர்க்குடும்பத்தைக் காப்பாற்றக் கிளம்புபவரையும் நடத்த வேண்டும்? இவையெல்லாவற்றுக்கும் மேல், ஒருவருக்குத் தன்னலம் இருக்கக் கூடாது என்று எப்படி நாம் 'demand'பண்ண முடியும்? அது அறமா? அப்படிக் கொண்ட எதிர்பார்ப்புக்குக் கிடைத்த ஆப்பைத் தான் இன்றும் நாம் சுமந்து கொண்டிருக்கிறோம்.

ஒருவர் தன்னுடைய வேலைகளை விட்டு விட்டு நமக்காக உழைக்க வருகிறாரென்றால், நம்முடைய எண்ணம் எவ்வாறு இருக்க வேண்டும்? நம்மை விட அவரும் அவரது குடும்பத்தாரும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பது தானே அறம்? எனக்கு தன்னலம் இருக்கக் கூடாது என்று நினைக்க மட்டும்தானே எனக்கு உரிமையுள்ளது? உன் குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு விட்டு எனது பரம்பரை சிறப்படைய உழைக்க வா என்றால் நமக்கு கருணாநிதிகளும் ஜெயலலிதாக்களும்தானே வாய்ப்பார்கள்?

தலைவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு வாழும் உதாரணமாகக் காட்டப் படுபவர் திரு நல்லக்கண்ணு. என்னுடைய கருத்தில் கருணாநிதி எந்த அளவுக்கு தவறான தலைமைக்கு முன்னுதாரணமோ அதே அளவுக்கு நல்லக்கண்ணுவும் தவறான பொது வாழ்க்கைக்கு முன்னுதாரணம்.

நமக்கு சுயநலம் மிக்க தலைமைதான் வேண்டும். சுயநலத்தில் என்ன தவறு? அடுத்தவனைக் கொள்ளையடித்து வயிறு வளர்க்காதவரை? இந்த நடைமுறைக்கு சிங்கப்பூர் ஒரு சிறந்த உதாரணம். "உனக்கு, போதும் போதும் என்கிற அளவுக்கு ஊதியம். எனவே ஊரைக் கொள்ளையடிக்காதே. அவ்வாறு இருந்தால் அரசிலுக்கு வா. உன்னையும் உனது குடும்பத்தையும் அரசாங்கம் சுபிட்சமாக வைத்துக் கொள்ளும். அரசாங்கத்தையும் குடிகளையும் சுபிட்சமாக வைத்துக் கொள்ள நீ உழை." இது அங்கு நடைமுறை. இப்படித்தானே நமது எண்ணமும் இருக்க வேண்டும்? நமது நிலைக்கு அது தானே கட்டளைக்கல்?

ஒன்று, அரசியல்வாதிகள் கொடுப்பதை நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு வாங்கிக் கொண்டு அவர்களுக்கே ஓட்டளித்து அவர்களை ஆட்சியிலமர்த்தி விட்டு, தமது வாழ்வுக்கு அவர்கள் எந்த நலனையும் சேர்க்கவில்லையே எனப் புலம்பும் ஒரு பாமரக் கூட்டம்; இன்னொன்று தமது வாழ்க்கையை சுபிட்சமாக அமைத்துக் கொண்டு தலைவர்கள் தன்னலமற்ற பிச்சைக்காரர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று அன்றாடம் அறிவுறுத்தும் ஒரு 'அறிவுஜீவி'க் கூட்டம்.

நெடுநாள் எனக்கு இந்த எண்ணமிருந்தாலும், இந்தப் பேத்தலை எழுத வைத்தது சமீபத்தில் இட்லிவடையில் பார்த்த ஒரு சிறு ஆவணப்படம் தான். கீழே சுட்டி கொடுத்திருக்கிறேன்.

http://www.youtube.com/watch?v=x39y1jU_lJM

இந்தப் படத்தை இயக்கியவரின் நோக்கத்தில் நான் பழுது காணமாட்டேன். ஆனால் நமது எதிர்பார்ப்பே தவறு என்ற சுய சிந்தனைகூட நமக்கில்லையே? ஆண்டாண்டு காலம் நாம் கேள்விப்பட்டு வரும் 'தன்னலமற்ற' எதிர்பார்ப்பை இந்தப் படத்தில் வரும் பாத்திரமொன்று வெளிப்படுத்தியதுதான் எனது இந்தப் பதிவுக்கு முக்கியமான தூண்டுகோல்.

படத்தில் வரும் பாத்திரங்கள், மிக நுணுக்கமாக, தமது வளங்களைப் (விலையுயர்ந்த சோபா, அடுத்த தேர்தலுக்கு அனேகமாக ஏதோவொரு கழகம் தமிழக மக்களுக்கு இலவசமாக வழங்கப் போகும் விலையுயர்ந்த தொலைக்காட்சிப் பெட்டி, கணினி...) பிண்ணனியில் வைத்துக் கொண்டுதான் நம்முடன் உரையாடுகிறார்கள் (இயக்குநரின் தெரிவாகக் கூட இருக்கலாம்); ஆனால் நமது தலைவர்களுக்கு தன்னலம் இருக்கக் கூடாது என்று எதிர்பார்ப்பது முரணல்லவா? எனது கருத்துப் படி தன்னலம் தவறல்ல; அது அடுத்தவரின் நலனை பாதிக்காதவரை.

தனிப்பட்ட முறையில், இந்தப்படம் தொழில்நுட்பத்தையும், இயக்கத்தையும் நேர்த்தியாகக் கைகொண்டிருக்கிறது. பொருள்? நாம் இன்னும் சிந்திக்க வேண்டுமோ?

எவ்வளவு திட்டினாலும் தாங்குவேன். எனவே தைரியமாகத் திட்டுங்கள்.

Saturday 19 March 2011

கெளம்பிட்டான்யா...

நாமளும் எவ்வளவு நாள்தான் சும்மா பாத்துக்கிட்டே இருக்கிறது? பட்டன் உதுந்து போன டவுசர முடிச்சுப் போட்டு இடுப்புல நிப்பாட்டி, அப்படியும் அகஸ்மத்தா இருக்கும்போது நழுவிறக் கூடாதுன்னு எப்பவும் அலாட்டா இருந்த வயசுல பார்த்த ஏதோ ஒரு படம் - அப்பல்லாம் படம் பாக்குறதே அப்படி ஒரு கொண்டாட்டம்; விஜயகாந்த்(கேப்டன், 'புரட்சி'க்கலைஞர்) கதாநாயகன்; கதாநாயகி (அதாவது வி.காந்துக்கு ஜோடி) யாரென்று நினைவில்லை; அனேகமாக அந்நாளைய வி.காந்தின் ஆஸ்தான கதாநாயகி விஜியாகத்தான் இருக்கும். ஒய்.ஜி மகேந்திரா நகைச்சுவை நடிகர். அந்தப் படத்தில் ஒய்.ஜி.எம்முக்கு ஒரு பழக்கம் உண்டு; அதாவது யார் மீதாவது கோபம் வந்தால் உடனே ஒரு காகிதத்தில் அந்த நபரின் பெயரை எழுதி அதை அப்படியே கசக்கி எறிந்து விடுவார். இது தான் அவர் அந்நபரை கொடூரமாகத் தாக்கும் முறை. அதேபோல நமக்கு ஏற்படும் அறிப்பை இப்படி வெட்டியாகச் சொறிந்து விட்டுக் கொள்ள வேண்டியது தான் என்று இறங்கி விட்டேன்.

நானும் பல வலைப்பூக்களை, எழுத்தாளர் மனைகளை, வலைப்பூக்களின் பின்னூட்டங்களைப் படித்துப் பார்க்கும்ப்போது இரண்டு விஷயங்களைக் கவனித்துள்ளேன். ஒன்று, கருத்துக் கூறியவர்களை வாசிப்புப் பழக்கமே இல்லை என்று ஒருவர் குறை கூறுவது. இதில் எனக்கு பெரிய மாறுபாடெல்லாம் கிடையாது; ஏனென்றால், நானே அவ்வாறான பழக்கமில்லாமல்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் காரணம் என்னவென்று பின்னர் கூறுகிறேன். இரண்டு, தனக்கு எல்லாம் தெரியுமென்று, அடிப்படை வாசிப்பு, அதாவது அன்றாடம் செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளை வாசித்தால் கூட கிடைக்கப் பெறும், அறிவு கூட இல்லாமல் எழுதுகிற பதிவர்கள், அவர்கள் எழுதியதில் உள்ள தவறை விபரம்றிந்தோர் யாரேனும் சுட்டிக் காட்டினால், உடனே மிகுந்த கோபமடைந்து அவர்களை குந்தாங்கூறாகக் காய்ச்சுவது. எவ்வளவு மொக்கையாக எழுதினாலும் 'அருமையான பதிவு' என்று ஒற்றை வரியில் பின்னூட்டம் போடும் ஒரு குழு உண்டு; இவர்கள் தரும் எரிச்சல் பொறுத்துக் கொள்ளக் கூடியதுதான். ஆனால், இது போன்ற மொக்கைப் பதிவர்களுக்கு தீவிர ஆதரவுக் குழு ஒன்று இருக்கும்; அதாவது அவர்களும் இவ்வாறான மொக்கைகளை எழுதிக் குவித்து சமூக கோபத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள்தான். இந்த ஆதரவாளர்கள், முன்னர் கூறிய மொக்கைப் பதிவருக்கு ஆதரவாக அவரின் தவற்றைச் சுட்டிக் காட்டியவருக்கு எதிராக ஒன்று சேர்ந்து கொண்டு அவரைக் குத்திக் கிழித்து விடுவார்கள். ஆனால் நான் எடுத்துக் கொண்ட விஷயம் அவ்விரண்டும் அல்ல. பிறகெதற்கு இந்த நீட்டி முழக்கிய ஒரு வெட்டிப் பத்தியென்றால், நமது பின்னணியும் சாதாரணமானது இல்லை என்று காண்பிக்க ஒரு build up தான்.

எனக்கும் பெரிய அளவில் வாசிப்புப் பழக்கமெல்லாம் ஒன்றுமில்லை. படக்கதைகளில் ஆரம்பித்து, துணைப் பாட நூல்களின் கதைகளில் கவரப்பட்டு, ராஜேஷ்குமார், பாலகுமாரன் வழியாக, தற்கால 'இலக்கிய' வாசிப்புக்கு வந்து சேர்ந்துள்ள ஒரு எளிய பின்புலம் தான். 'இலக்கிய' வாசிப்பு என்றவுடன், ஒன்றும் பெரிதாக எண்ணிவிட ஒன்றுமில்லை. எல்லாம் மேம்போக்கானது தான். அதுவும் தற்பொழுது உட்கார்ந்து வாசிக்கும் பொறுமையெல்லாம் போய்விட்டது. ராஜேஷ்குமார் என்றால்தான் பொறுமை வரும் போல. சரி பிறகு எப்படித்தான் தெளிவது? இப்படி 'பேத்த' ஆரம்பிக்கலாம். 'அருமையான பதிவு' பின்னூட்டங்களைத்தாண்டி 'குண்டக்கமண்டக' கேட்க எப்படியும் ஓரிருவர் வருவர். அவ்வாறான விவாதங்களில் தெளிந்து கொள்ளலாம் என்று 'பேத்தல்கள்' ஆரம்பித்து விட்டேன். நமது பேத்தல்களில் பெரும்பாலும் அடுத்தவரைக் குறைகூறும் பதிவுகள் வரும் வாய்ப்புத்தான் அதிகமாக இருக்கும். ஏனென்றால் நமது குணாதிசயம் அவ்வாறு அமையப் பெற்றதாகும்.